Monday 10 June 2013

தொடை தொடையாம் முந்திரிக்கா .... ! இந்திய சினிமாவின் நூற்றாண்டு சிறப்பு பதிவு !



தமிழ் திரையுலகில் பெண்களுக்கு சற்றும் சலியாமல் ஆண்களும் கவர்ச்சி காட்டுவது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது .இப்போதைக்கு ,நம்ம சசிகுமார் தான் தொடை தெரிய கவர்ச்சி காட்டிக் கொண்டு இருக்கிறார் ...குட்டிப்புலி படத்தில் ! குட்டி புலி என்பதாலோ என்னவோ...அவர் தொடை சற்று சூம்பி போய் சின்ன தொடையாகத்தான் உள்ளது ! தமிழ் சினிமாவில் .உண்மையான தொடையழகு தம்பிரான்கள் யார் யார் என்று இன்றைய தமிழ் சூழலுக்கு மிகத் தேவையான ஒரு விஷயத்தைப் பார்ப்போம்.

நம் முதல் கதாநாயகர் தியாகராஜ பாகவதரை எடுத்துக் கொண்டால்...இவர் பெரும்பான்மை சமயங்களில் வேஷ்டி போல கட்டி இருந்தாலும் ... தாவணி விலகா பெண்ணாய் ...தொடை காட்டாமல் தான் நடித்திருக்கிறார் , அடுத்து சின்னப்பா போன்றவர்களும் கூட அப்படித்தான் ! மற்றப்படி பாகவதர் முதல் தனுஷ் வரை மார்பு காட்டி நடித்திருந்தாலும் ... அதை ஒரு பெரிய விஷயமாக ...பெண்களுக்கு எதிரான ஒரு 'போட்டிக் கவர்ச்சி' என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த 'தொடை காட்டும் படலத்தை' முதன் முதலில் தொடங்கி வைத்தது நம்ம MGR தான் என்று சில..பல ஆராய்ச்சிக்குப் பின் அறிய முடிகிறது.வில்லனுடன் மோதும் போது ... சரேலென்று அணிந்திருக்கும் வேஷ்டியை முன்னே நெகிழ்த்தி ... பின்னால் சொருகி தார் பாய்ச்சு கட்டு கட்டுவார் (அது என்ன தார் பாய்ச்சு .... ரோடா போடறோம் ? ). திடீரென்று முட்டிக்கு மேலே ..... பிடித்த நாயகனின் தொடை திரையில் பெரிதாக தெரிவதை , அக்காலப் பெண்டிர் சற்றே படபடப்புடனே ரசித்திருப்பார்கள் என்று உணர முடிகிறது.இருந்தாலும் ...ஏனைய விஷயங்களில் புகழ் பெற்றிருந்தாலும் ...இது தொடை பற்றிய பதிவானதலால், இவரது தொடையும் சற்றே மெலிந்திருந்ததால் பெரிதாக பாராட்ட முடியவில்லை ! 'கொடை வள்ளல் ' என்று பெயெரெடுத்தவரை....தொடை வள்ளல் என்று அழைக்க முடியவில்லை ! இருந்தாலும் மாநிலம் பயனுற ஒரு நல்ல கலாச்சாரத்தை தொடங்கியதால் இவரே முன்னோடி ! ஆனால் இவர் காலத்திலேயே நம்ம நம்பியாருக்கு அற்புதமான தொடை வரப்ரசாதமாக அமைந்திருந்தது...தீவிர உடற்பயிற்சியும் உடையவர் என்பதால்...அவரது தொடை நன்கு விரிந்து பரந்து செழுமையாக இருக்கும்...இதை MGR அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சண்டை காட்சியில் காணலாம்.

சிவாஜி அவர்களின் நடை , உடை , பாவாடை...ஸாரி ... பாவனை எல்லாம் அட்டகாசமாக இருந்தாலும் .. இடுப்புக்கு மேல் தான் ...கீழே அவரது கால்கள் MGR கால்கள் போல சுமார் ரகம் தான் ...வித்தியாசம் ...கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் அவ்வளவு தான் !.அடுத்து நம்ம ஜெமினி கணேசன் சார் கூட ,கண்கள் உருட்டுவதிலும்...ஹஸ்க்கி வாய்ஸில் ....காதல் மொழிகள் ( ஷாந்த்தாஆ...).பேசி தான் ரசிகைகளை மகிழ்வித்தாரே தவிர தொடை காட்டுவதில் கவனம் செலுத்தவில்லை ... ஒரு வேளை திரைக்குப் பின்னால் காட்டியிருப்பாரோ ?

அடுத்த தலைமுறையாக ...ஜெய்சங்கர் அவர்கள் 'கௌ - பாயாகவே' காலத்தை ஓட்டி .. பேன்ட் அணிந்து துப்பாக்கி சுடுவதிலேயே ஆர்வம் காட்டினார்.அதுவுமில்லாமல் அவர் நடித்த Dr.கர்ணன் படங்களில் ஆண்கள் கவர்ச்சிக் காட்ட அனுமதியில்லை. ரவிச்சந்திரன்,முத்துராமன் போன்றோர் மிக பிரபலமாக இல்லாததால் ...தொடை காட்டி நடித்தாலும் ,அவர்களைப் போலவே ... அவர்கள் தொடையும் பெரிதாக பிரபலமாகவில்லை.திரையுலக மார்க்கண்டேயன் என்று செல்லமாக அழைக்கப்பட்டாலும் ...தீவிர யோகாசனங்களால் சிவகுமார் அவர்களின் தொடையும் இளைத்துப் போய் மதிப்பெண் இழக்கிறது.ஆக இந்த கால கட்டம் ....அல்லது கால வட்டம் ஒரு தொடை வறட்சி தலைமுறையாக போய் விட்டது !

நம்பியாரும் வில்லனாகவே இருந்து விட்டதால் ... தொடைப் பஞ்சத்தில் இருந்த முற்கால தமிழ் சினிமாவிற்கு... பிற்காலத்தில் நல்ல பல தொடையழகர்கள் கிடைத்தார்கள் !.முன்னோடி MGR போல் .... பின்னாளில் தொடைக்கோர் மறுமலர்ச்சி ஏற்பட்டது கமலஹாசனால் தான் ! 'வேட்டி மறைவு' தொடையாக காட்சி அளித்துக் கொண்டிருந்த பழைய நாயகர்களை தாண்டி...கட்டியிருந்த வேட்டியையே 'சட்டென' உருவி எறிந்து ... தேசிய உடையான கோவணத்துடன் ...'16 வயதினிலே' படத்தில் ரசிகைகளை திக்கு முக்காட வைத்தார் கமல்ஜி ! கலைக்காக ...அதையும் உருவி எறியவும் கமல் தயாராக இருந்திருப்பார் ... வெளிப்புற படப்பிடிப்பு என்பதால் பாரதிராஜா அவர்கள் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.சதைப் பற்று அதிகம் இல்லை என்றாலும் கதைப் பற்று இருந்து ... முக்கால் நிர்வாணமாகியதால் அவருக்கு தொடையழகன் பட்டம் 'கட் ஆப்' மதிப்பெண்ணில் கிடைத்து விட்டது ! தொடைக்கோர் கீதமாக இவரது 'பொன் மேனி ..' பாடல் விளங்குகிறது .இதையே முன்மாதிரியாக வைத்து ராமராஜன் 'டவுசர் பாண்டியாக' களம் இறங்கி ... எ .ஊ .பா .படமும் 'ஹிட்' ஆகியது ... ஆனால் பிற்பாடு அவர் ட்ரவுசர் போடாமல் நடித்ததால் ....தப்பா நினைச்சுடாதீங்க மக்களே ...வேஷ்டி, பேண்ட்டெல்லாம் போட்டிருந்ததார் ....தொடை வறட்சி ஏற்பட்டு ...பிறகு சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை !

தொடை பஞ்சத்தில் இருந்த தமிழ் சினிமாவை மீட்க ஒரே காலகட்டத்தை சேர்ந்த ...உடற்பயிற்சி பயின்ற பிரபு,விஜயகாந்த்,சத்யராஜ் என்கிற பெரும் படை தொடையில் ...ஸாரி ...திரையில் களமிறங்கியது ! பிரபு ,சின்ன தம்பி போன்ற கிராமிய படங்களில் ...இலை மறை காய் மறையாக தொடை காட்டி நடித்து அவ்வகை படங்கள் வெற்றியும் பெற்றன ! விஜயகாந்த் ..தொடை என்று முக்கியத்துவம் கொடுக்காமல் ஒட்டுமொத்த காலுக்கும் சேர்த்துக் கொடுத்து... சண்டை காட்சிகளில் புகழடைந்தார்.இங்கு சத்யராஜை பற்றி அவசியம் சொல்லவேண்டும்...பெண்களுக்கு இணையாக...தண்ணீரில் மூழ்கிக் கொண்டு...ஈரத்தில் ஒட்டிய வேஷ்டி . அன்டர்வேர் ...என்று சளைக்காமல் கவர்ச்சிக் காட்டினார் ! அதிலும் கடலோரக் கவிதைகள் படத்தில் போதும்...போதும் என்று அலுக்க ...அலுக்க 'ஸீன்' காட்டி படத்தின் வெற்றிக்கு பாடுபட்டார் ! இதுவும் பாரதிராஜா படம் ... ஆக நாயகர்களின் கவர்ச்சி காட்டுதலுக்கு இவரின் பங்கு தமிழ்த்திரைக்கு இன்றியமையாதது ! இவரின் பு.நெ.பு.நா.(கெட்ட வார்த்தை இல்லை) படத்தில், நாயகி...நாயகனின் தொடையை தன் விரல்கள் மூலம் மயிலிறகால் வருடுவது போல் ஸ்பரிசித்து விட்டு ..."கருத்த மச்சான்..", என்று பாடி படம் தூள் கிளப்பியது !

இதே சமயங்களில்...தன் உடல் ஆகிருதி மூலம் திரையில் புகழடைந்து இருந்த சரத்குமார் கூட தொடையழகில் வெல்ல முடியவில்லை...ஏனென்றால் அதில் வெற்றி பெற உடற்பயிற்சி இருந்தால் மட்டும் போதாது ...சற்றே தொள ....தொளவென்று ஊளை சதையும் இருக்க வேண்டும்.சரத்துக்கு ...அவரது உடல் போல் இல்லாமல் தொடை சதை கொஞ்சம் கம்மி தான்.

தமிழ் திரையுலகின் நாயகர்கள் ஒரு சிறந்த 'தொடைராஜா' வாக ஆவதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது ! வெறும் உடற்பயிற்சி இருந்தால்... அது சதைப் பற்று சற்று கம்மியாக... 'ஆடா தொடையாக ' இருக்கும் ! அதனால் குத்தாட்டம் போடும் போதும் .... சண்டையில் உதைக்கும் போதும் ...சதையாட்டம் இருக்காது ! நாயகிகளே டக ...டக வென்று ...மார்ப்புக் கச்சையும் ....ஏன் சில சமயம் மார்ப்பே பிய்ந்து விடுவது போல் குலுக்கி மற்றும் ஆ(ட்)டிக் 'கொல்வார்கள் '.... அப்படியிருக்க நாயகன் என்றால் சும்மாவா...சும்மா ரெண்டு ஊருக்கு போயிட்டு வருவது போல் சதை ஆட வேண்டும் அல்லவா... ?

இனி தான் தான் திரையுலகில் ஒரு 'தொடை புரட்சி' செய்த ..... ஒரு தலையாய நாயகனை பார்க்கப் போகிறோம்...அவர் வேறு யாருமல்ல...தனது ஒவ்வொரு படத்திலும் ...நம்பி வரும் ரசிகைகளை ஏமாற்றாமல் 'தொடைக்காட்சி' அளித்து ...தொடர்ந்து வெற்றி படங்களை ...கொடுத்த...கருத்த ...பெருத்த...பருத்த தொடையழகர் ராஜ்கிரண் தான் ! எ.ரா.ம. இல் ஆரம்பித்தது இவரது தொடை தரிசனம் !! ...படமும் ஹிட் ஆனதால்...கவர்ச்சி ஆட்டம்,குத்து நடனம் போல் ...இவரது தொடை காட்சிகளும் ...விநியோகஸ்தர்களால் வேண்டப்பட்டன ! பருத்த தொடையுடன் ...அன்டர்வேர் பாதுகாப்புடன் ..இவர் எம்பி..எம்பி அடிப்பதில் ....பல பெண்கள் பரவசமானார்கள் என்பது நிதர்சனம் ! வெட்டிப் போட்டால் ரெண்டு ஊரு சாப்பிடும் அளவு கறி இருப்பது போல ..'ஒக்க பிரம்மாண்ட ஸ்டரக்டரலு' ! சலிக்க ....சலிக்க காட்டி..பின் கொஞ்ச கொஞ்சமாக தொடை மறைத்து...பின் அவரும் திரையில் மறைந்து விட்டார்.
ஆக தமிழ் திரையுலகத்தின் மத்திய காலம் தான் தொடைராஜாக் களின் பொற்காலம் என்று சொல்லலாம்.

இன்றைய காலக் கட்டத்தில்.... பிரசாந்த் ,தொடை காட்டி நடித்திருந்தாலும் ..of course அது பெரிதாக இருந்தாலும் கூட...பழைய குலுக்கல் நடிகை ஜெயமாலினிக்கு போட்டியாகத்த் தான் அது 'பாலீஷாக' இருந்தது ! ஒரு வேளை 'அவனுங்களுக்கு ' பிடித்திருக்கும் போல ! விக்ரம்,சூர்யா என்று 'ஆறு பட்டை வயிறு ' (6 pack ) உள்ள நாயகர்களுக்கு கூடதொடையை பார்த்தால் .... சிறிய வகை பிராய்லர் கோழிக்குஞ்சு தொடையாகத் தான் தெரிகிறது ! விஜய் கூட இந்த தொடை விஷயத்தில் வீக் தான்...'கா.ம' படத்தில் நீச்சல் குளத்தில் இருந்து அவர் 'ஷார்ட்சுடன்' வெளி வந்து ஒரு நடை நடந்து வருவார் பாருங்கள்...பள்ளிகூட பசங்க தொடை போல செம காமெடியா இருக்கும் ! இந்த லட்சணத்துல இவர் அஜித் தொப்பையை கிண்டல் பண்ணி "குண்டு மாங்கா "பாடலுக்கு ஆடினார்... அவ்வளவு தான் 'அஜித் கார்ப்பரேஷன்' ஆட்கள் பலவாறாக R & D பண்ணி தளபதியிடம் இல்லாத சரக்கு ... 'தல'யிடம் என்ன இருக்கிறது?.., என்று தேடிக் கண்டு பிடித்தார்கள் ...அது தான் தொடை ! "சாலா..." பாட்டில் 'தொடை பறக்க' ஆடி ...சும்மா...பின்னு பின்னென்று பின்னி...விஜய்க்கு சொல்லாமல் சொல்லி, பதிலடி கொடுத்திருப்பார் ! ரசிகைகள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பித்து பிடித்து போனார்கள்...பாட்டைப் பார்த்து ! ஒரு 'தல' ரசிக நண்பனே சொனனான் ...இதுக்கே காசு சரியாயிடுச்சு என்று...திரைப்படம் பார்த்து அல்ல ...'ப்ரீமியர் ஸ்டில்சை' பார்த்தே ..! அந்த பாடலில் அஜித் ..வேஷ்டியை விலக்கி சரேலென்று தொடையை தூக்கி காட்டும்போது...அந்த தொடையில் MGR ம் ...ராஜ்கிரணும் ஒரு சேர (கலர்+கவர்ச்சி) தெரிந்தார்கள் ! ஆக தமிழுக்கு ஒரு 'தல'யாய தொடையழகர் கிடைத்து விட்டார் ! அதன் பிறகு தான் விஜய் ...தொடை காட்டி ரிஸ்க் எடுக்காமல் ஒதுங்கி விட்டார்....முன் காலங்களில் கமலைப் பார்த்து ரஜினிகாந்த் தொடைப் போட்டியிலிருந்து விலகியது போல் !

இது இப்படி இருக்க ... தமிழ் கதாநாயகர்களுக்குத் தான் எத்தனை எத்தனை தகுதிகள் இருக்க வேண்டும் பாருங்கள்...அவன் ஓவியன், பாடகன் என்று எந்த தொழில் செய்தாலும் ..திறமையாக சண்டையிட வேண்டும்,காதலிக்க வேண்டும்..தாய்ப்பாசம் காட்ட வேண்டும்,நடனம் ஆட வேண்டும் ..ஸ்ஸ்ப்பா...!!! அது போல் ,,,இருக்குதோ இல்லையோ...தொடை வேறு காட்ட வேண்டும் ! ஆனால், இயக்குனராக இருந்தாலும் ..சசிகுமாருக்கு இது தெரியாதா என்ன.?..அவரைப் போன்ற நடிக இயக்குனரான SJ சூர்யா ..தனது 'சோமாலிய தொடையையே' வேஷ்டி விலக்கி ...தன்னம்பிக்கையுடன் காட்டி ஆடியிருப்பார் ..'மயிலிறகே' பாடலுக்கு ! இவரோட இரண்டு காலையும் சேர்த்து வைத்தால் கூட நம்ம ராஜ்கிரனோட ஒரு தொடைக்கு ஈடாகாது ! அப்படியிருக்க....தான் 'குட்டித்தொடை' என்றாலும்....காட்டுவதில் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை என கோதாவில் குதித்து விட்டார் சசி !
அஜீத்துக்குப் பிறகு ...எதிர்காலத்திற்கு...செழித்த வளமான தொடையுடன் ... ஜெயம் ரவி மட்டும் தான் நமக்கு ஒரு நம்பிக்கை 'தொடைச்சித்திரமாக' தெரிகிறார் ! வாழ்க தொடை....வளர்க அவர் சதை !

இந்த' தொடையேழு வள்ளல்களை' தமிழ்த்திரையுலகம் என்றும் நினைவில் கொள்ளும் !
'தொடைப்புராண' பதிவு முடிந்தது !

பி.கு : இங்கு தொடை என்பதை உருவகமாகக் கூடக் கொள்ளலாம் .

No comments:

Post a Comment