Monday 10 June 2013

சிகைப் புராணம் அல்லது மயிர் பதிவு



தீவிர மனக்கிலேசம் ஏற்படும் போதெல்லாம் மொட்டை அடித்து ...கடலில் மூழ்கினால் எனக்கு மலர்ச்சி கிடைப்பது போல் ...(ஒரு முறை அலகு கூட குத்திக் கொண்டேன் ) தீவிர காய்ச்சல் , சளி, ஜலதோஷம் போன்ற உடல் உபாதைகள் தோன்றினால்....வேறொரு உபாயம் செய்வேன் ! அது... சிகையை மழுங்க சிரைப்பது .... எப்படி என்றால் ' மொட்டை அடித்த பின் சில நாட்கள் ' அளவு .... அரும்பு மீசை போல , அரும்பு தலை மயிர் ! இந்த அளவு முடியை heavy summer cut போட்டு விட்டு ..... வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு ..... அப்படியே கடற்கரையோர சாலையில் ..... எனது ஒற்றை கொம்பனில் (Unicorn - Honda )சென்றால் போதும்..... அனைத்து உபாதைகளும் காத தூரம் ஓடி விடும் ! பின் , நாட்டுக் கோழியோ .... பிராய்லரோ ... நிறைய மிளகு போட்டு..... நீர்க்க குழம்பு செய்து ,அதில் புழுங்கல் சாதம் சூடாகப் பிசைந்து வாயில் போட்டு.....அவ்வப்போது வெந்நீர், மிளகு கலந்த 'ஓல்ட் மங்க்' சில மிடறுகள் ! மேற்கூறிய' இயற்கை வைத்திய ' முறைகளினால் நான் பல வருடங்களாக குணமாகி வருவதால்,எனது மருத்துவ.... நண்ப மற்றும் உறவினர்கள் செம 'காண்டில் ' இருக்கிறார்கள் ! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்", என்கிற சீரிய கோட்பாடினால்... நான் எனது பல உறவின,நண்ப
மக்கட்க்கும் இதைக் களப் புரிதலோடு உணர்த்துவதால் தான் என் மருத்துவ உறவினர்களுக்கும் , Dr.நண்பர்களுக்கும் அதிக கோபம் !

இயற்கையிலேயே நமது உடலில் எல்லா எதிர்ப்பு சக்திகளும் நிரம்பியுள்ளது ..... ஆனால் திருட்டு நடக்காத' VIP ஏரியா அபார்ட்மெண்ட்' காவலாளி போல வேலையில்லாமல்....இல்ல வேலை கொடுக்காமல் அந்த சக்திகள் தூங்கி விடுகின்றன ! சின்ன தலைவலியோ , தும்மலோ வந்தாலே...உடனே அந்நியன் போல மருத்துவர் அவதாரம் எடுத்து விடுகின்றனர் நம் மக்கள் ! செட்டு மாத்திரையில் தொடங்கி .... ப்ளட்டு மாத்திரை வரை , குடிசை முதல் மாட மாளிகை ...ஸாரி ...அபார்ட்மெண்ட் வரை இக்கலாச்சாரம் பரவியுள்ளது ! அறுவை சிகிச்சைக்கு மட்டும் தான் அலோபதி , மற்ற விஷயங்களுக்கு "ச்சலோ பதி !"

இந்த சிகை மழி கலைஞர்களுக்கு .... அதாங்க நம்ம Beauticians ?! ....இவங்களுக்கு , அவங்க சொத்தையே இழப்பது போல் .... நம்ம 'சிகை இழப்புக்கு' ரீயாக்ட் கொடுப்பாங்க பார்த்துருக்கீங்களா...? நாமே ஜுரத்தில் கஷ்டப்பட்டுகிட்டு வந்து,...."சுத்தமா குறைச்சிடுங்க அண்ணே ..." , அப்படின்னு சொன்னா கூட .."சரி...சரின்னு", சொல்லிட்டு ....சும்மா மேலாப்ல வெட்டிடுடறது ...."என்னண்ணே ??", அப்படின்னு கேட்டதும் ...கொஞ்சமா வெட்டறது....அப்புறம் கொஞ்சம்...! கடைசியா " போதுண்டாம்ப்பா ", அப்படின்னு நாமளே சொல்லிட்டு வந்துற வேண்டியது தான் ! ஏண்டா இப்படி பண்றாங்கன்னு பாத்தா ...இது வியாபார நுணுக்கமாம் !? அடிக்கடி 'கஷ்டம(சு)ருங்க' வரணும்னு இப்படி பண்ணுறாங்களாம் !? அட பாவிகளா ...2 மடங்கு சேர்த்து கூட பணம் கொடுக்க தயாராயிருக்கோம் , "சொல்ற லெவலுக்கு வெட்டுங்கண்ணே", என்று பிற்பாடு சொல்ல ஆரம்பித்தேன் ! அவரும் மனசுக்குள் புலம்பியபடி ,வெளியில் இன்முகத்துடன் செய்து முடிப்பார் ! சில சமயம் கோவிலுக்கு முடி காணிக்கை கொடுத்த பிறகு , ட்ரிம்மிங் செய்யச் செல்லும் போது அதிர்ச்சியில் , அவர் கண்ணு முழிகள் பிதுங்கி வெளி வந்து விடும் ! (3 மாசம் பிசினசு கோவிந்தா ! )

நிறைய முடி அடையும் போது , அதன் வேர்க்கால்களில் அழுக்குகள் படிய ஆரம்பிக்கும்.அப்படி படிய ஆரம்பிப்பதால் ..... மண்டையில் வியர்க்கும் நீரானது ,காயாமல் அதனூடே தங்கி ஈரப்பதத்தில் .... ஜலதோஷம் ,தலை பாரம் என்று வளர்ந்து காய்ச்சலில் முடிகிறது ! ஷாம்பூ மற்றும் சீயக்காய் தூள் மூலம் இதனை களையலாம் , ஆனால் ஷாம்பூவில் உள்ள ரசாயனங்கள் உகந்ததல்ல . எண்ணை தடவிய பின்னர் ....சீகைக்காய் தூள் குளியலே சாலச் சிறந்தது ! வெறுமனே தலை குளிக்கும் போது , நீர் முழுதும் போகாமல் மண்டையிலேயே தங்கி...தலை பாரம் போன்றவை ஏற்படும் ! இந்த அடிப்படையின் மூலமே நான் சரி செய்துக் கொள்வேன், மருத்துவரிடம் வெறுமனே மாத்திரை வாங்கி மெல்லாமல் ! சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ .... கண்டிப்பா காய்ச்சலை விரட்டும் !

முன்பெல்லாம் அக்குள் முடியை கடையிலேயே எடுப்பர் .... சிகை கலைஞர்கள் முகத்தை பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கும் ....இருப்பினும் வேறு வழியில்லை என்று ...கையை தூக்கிக் கொண்டு அவரிடம் காட்டும் போது .....ஏதோ நிர்வாணமாக நின்றுக் கொண்டு காட்டுவது போல் ....வெட்கமாக இருக்கும் ! இப்போதெல்லாம் எங்குமே அவ்வாறு செய்வதில்லை என்று நினைக்கிறேன்...நல்ல விஷயம் ! அக்குள் முடி எடுத்தல் மிக அவசியமான ஒன்று ....வியர்வை மிக அதிகம் சுரக்கும் இடமது....உடனுக்குடன் துடைத்து விடல் அவசியம்.அதுவும் ரோமம் அதிகம் இருந்து ....காயாமல் இருந்தால் ... நிச்சயம் சளி பிடிக்கும் ! குளித்த பிறகு ...நாம் அங்கு துடைக்க மறந்து விடுவோம் .... அது தான் பிரச்சனை ! ரோமம் அங்கு நீக்கி இருந்தால் .... இந்த பாதிப்புகள் பெருமளவு குறையும் ! சாதாரண அக்குள் பிரதேசம் ...ஏன் ஒரு காமக் குறியீடு ஆனது என்று உங்களுக்கு தெரியுமா....யோசித்துப் பாருங்கள்.... ஆங்...அதான் விஷயமே !

அந்தக் காலங்களில் இந்த முடிகளே வேறொரு மிக முக்கியப் பயனையும் பெற்றுள்ளது ! சுத்தமாக குளித்து முடித்த பின்னர் அந்தப்புர பெண்கள் .... அகில், சந்தனம் போன்ற வாசனை பொருட்களை தூபத்தில் கலந்து புகை போட்டு ஒரு சட்டியில் பரப்பி .... அதை இரண்டு கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு ....அணிந்திருக்கும் பாவா டையால் மூடி விடுவர்.....அந்த சுகந்தப் புகையானது 'உள்ளே' சென்று ....எங்கும் வியாபித்து ... ரோமங்களில் படிந்து தங்கி விடும் ! அந்த சுகந்தம் 'உள்ளேயே ' இருப்பதால் .... காற்றில் கலக்காமல் ....நாள் முழுதும் நறுமணம் வீசிக் கொண்டே அரசனை பித்தத்தில் ஆழ்த்தும் ! வாத்ஸ்யாயனரின் காமசூத்ராவில் படித்தது !

நாம் ஆப்பிரிக்க வம்சாவழியினர் என்ற ஒரு கூற்றை நிரூபிப்பது போல் என் நண்பனொருவனின் சிகை இருக்கும்,எப்படி என்றால் சிகை கலைஞர் அவனின் சுருள் சுருள் முடிகளை ...சுருள் நீக்கி ,வெட்டி.... கை ஓய்ந்து போய் ....அவ்வப்போது ..கத்திரியை முடியிலேயே சொருகி விடுவார், அதுவும் அப்படியே தொத்திக்கிட்டு நிற்கும் ! அவ்வளவு நெருக்கமான சுருள் சுருள் ! இவனுக்கு சாவும் வரை சொட்டையோ , நரையோ கிடையாது என்று என் சித்த நண்பன் சொல்வார் !

எனக்கெல்லாம் பள்ளி பருவத்திலேயே நரைக்கத் தொடங்கி விட்டது , காய்கறி, கருவேப்பிலை என்று அனைத்தையும் நான் ஒரு பிடி பிடித்தேன் என்றாலும் , ஒன்றிரண்டு தட்டுப்பட்டுக் கொண்டு தான் இருந்தன ! பல களப்பணிகள் புரிந்த பிறகு, இது என் தந்தை எனக்குக் கொடுத்த முதல் சொத்து என்று தெரிந்துக் கொண்டேன், ஆம்...அவருக்கும் இள நரையாம் ! இதில் ஒரு பெரிய வசதி,சிறு வயது முதல் இதில் பழகி விடுவதால் .... வயதான பிறகு ஏற்படும் நரைக்கு மற்றவர் போல் கவலையிராது ! ஆனால் முன்பெல்லாம் என் தந்தை , மிக பிரமாதமான முறையில் டை அடித்துக் கொள்வார் .... ஒரு யாகம் போல் முதல் நாள் இரவில் இருந்து நிதானமாக தடவ ஆரம்பித்து , பின் காலையில் ஒரு முறை 'பட்டி' அடித்து நிகழ்ச்சிகளுக்கு செல்வார் ! பார்ப்பவர்களெல்லாம்," இன்னும் அப்படியே இருக்கீங்க", என்று விளம்ப ... விளம்ப ஒரே பூரிப்பில் இருப்பார் ! உண்மையிலேயே அவருக்கும் நன்றாக 'செட்' ஆகி விட்டது .... அதீத உழைப்பாளியாதலால் அளவான உடலுடன் மிக இளமையாக தெரிவார் ! எப்படி என்றால் எங்கள் இருவரையும் பார்த்து சகோதரர்கள் என்றோ.....சிலர் ஒரு படி மேலே போய் , நான் அவரின் அண்ணன் என்றும் கூறுவர் ! முடி வெளுத்திருந்தா பெருசு....கருத்திருந்தா சிறுசா ?.. அட பாவிகளா !

நான் செயற்கை பூச்சுகளை பூசுவதில்லை , எவ்வளவோ பேர்கள் சொல்லியும் நான் செய்வதில்லை . எனக்கு இந்த நரை ஒரு வசதியாகத் தெரிந்தது , அதாவது என்னை விட பெரியவர்கள் கூட என்னை 'பெரியவன்' என்று நினைத்து மரியாதையுடன் அழைப்பது , சில சமயம் "அண்ணே " என்றும் அழைப்பது.முக்கியமாக எனது அலுவலக பணிகளில் நிறைய பொதுமக்கள் , முக்கியஸ்தர்கள் , உயர் அதிகாரிகள் போன்றவர்களுடன் 'பஞ்சாயத்துக்கள்' நடைபெறும். 'மீடியேட்டர்' போன்ற என் பணிக்கு இந்த நரை ஒரு வரப்பிரசாதம் . பிரச்சனையின் வீரியம் மிக அதிகமாகப் போகும் போது ... "தம்பி கொஞ்சம் பேசாம இருப்பா ", என்று என்னை விட பெரியவர்களை கூட கொஞ்சம் அடக்குவதற்கு ஏதுவாக இருக்கும் !

"வயது ஏற...வயது ஏற ஒரு முதிர்ச்சியுடன் இருப்பதே அழகு , அந்தந்த வயதுக்குரிய வாகும் , நரையும் , உடல் மொழியும் முக்கியம் . அதை விடுத்து பேத்திகளுடன் "பல்லேலக்கா".. ஆடிக்கொண்டிருக்க , நாம் திரைப்படங்களிலா நடித்துக் கொண்டிருக்கிறோம் ? ", மேற்கண்ட டயலாக்கை நான் தத்துவார்த்தமாக என் உறவினர் ஒருவரிடம் உதிர்த்துக் கொண்டிருந்த போது என் தந்தை கேட்டு விட்டார் ! அவர் 'பல்லேலக்கா' எல்லாம் ஆட மாட்டார் என்றாலும் அதன் பிறகு டை அடிப்பதை நிறுத்தி விட்டார் ! நான் அவருக்காக கூறவில்லை என்று சொல்லி ...நானே வாங்கிக் கொடுத்தும் ,இன்று வரை 'டை ' போடவில்லை ! இப்போது நரைத்த முழு தாடி மீசையுடன் .... கிட்டத்தட்ட எழுத்துச்சித்தர் பாலகுமாரன் கெட்டப்பில் இருக்கிறார் ! எனக்கே இப்போது அவர் மேல் பயம் கலந்த மரியாதை வருகிறது .... இப்போதெல்லாம் எதிர்த்து பேசுவதில்லை ! அப்பாவை இளைஞர் என்று துதி பாடிய கோஷ்டி இப்போது போய் ....வேறொரு பஜனை குழு வந்து விட்டது ..... கோயில் , பூஜை புனஸ்காரம் எல்லாவற்றிற்கும் ..... அப்பாவின் தலைமையில் தான் ! ஆகையால் என் டயலாக் சரிதான் என்று இப்போது அவரும் உணர்ந்திருப்பார் ! ஆனால் இப்போது எனக்கு என்ன நடந்ததென்றால் ..... என் பாசமிகு தோழி , இயற்கை முறையிலான ....மருதாணி தழைகள் கலந்த ஒரு களிம்பு கொடுத்திருக்கிறார் .... அதன் உபயத்தில் அவ்வப்போது மட்டும் , நான் சற்று செம்பட்டை தலையனாக ....கருப்பு கிடையாது ...ஹீ ...ஹி !

செமம்பட்டை முடி என்றதும் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது.... ஒரு நாள் என் நண்பன் ஒருவன் வேகமாக என் வீட்டிற்கு வந்தான்...அவன் முகத்தில் ஒலிம்பிக் ஜோதி பிரகாசம் ... கையில் ஒரு பாலித்தீன் கவர் !

"என்னடா ?"

"மாப்ளே ... சாதிச்சிட்டேண்டா ... கையோட கொண்டு வந்துட்டேன்டா ! "

எனக்கு ஒன்றும் புரியவில்லை "ரஜினி ராமு " என்று தனது தலைவன் பெயரை இனிஷியல் போல் வைத்துக் கொண்டு திரியும் இந்த 'வெறி ரசிக' நண்பன் சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று இப்போது தான் வருகிறான். சரி அவன் தலைவரோடு பேசி ,புகைப்படங்கள் இத்யாதிக்கள் நடந்திருக்கும் , அதில் நெகிழ்ந்திருக்கிறான் என்று எண்ணி ... அவனை ஆசுவாசப்படுத்தினேன். அவன் மெல்ல கையில் உள்ள பாலித்தீன் கவரைப் பிரித்துக் காட்டினான் . உள்ளே ஒரே ஒரு செம்பட்டை முடி ! நான் கேள்வியுடன் பார்க்க ... அவனோ ," பார்த்தியா ...தலைவரோட மயிரு , கூட்டத்துல அடிச்சி பிடிச்சி புடுங்கிட்டோம்ல ", என்று பெருமையாக சொன்னான்.இது போன்ற 'மயிர் ரசிகர்களை' வைத்திருக்கும் ,அந்த தலைவனை நினைத்து எனக்கு பரிதாபம் தான் தோன்றிற்று. யாருக்கு வேண்டுமானாலும் தலைவனாயிருக்கலாம் , இந்த திரையுலக தலைவர்களாய் இருப்பதன் ஆபத்து புரிகிறது ! என் நண்பன் கலந்துக் கொண்ட அந்த தள்ளு முள்ளு நிகழ்ச்சியில் , நடிகருடைய காது வளையமும் ஒரு ரசிக கண்மணியால் பிடுங்கப்பட்டு .... படத்தின் continuity பாதிக்கப்பட்டது என்று பின்னர் செய்தியில் கூட படித்தேன் . ஆனால் இந்த மயிர் பிடுங்கல் நிகழ்ச்சி பற்றி நடிகர் எதுவும் சொல்லவில்லை ... "நல்ல வேளை ...காது வளையத்தை கழட்ட முடியாமல் ... காதோடு அறுத்து எடுத்துப் போகாமல் விட்டானுங்களே ", என்று மயிர் சமாச்சாரத்தை சொல்லாமல் விட்டிருப்பார் என்று நினைக்கிறேன் ! ராமுவின் ஏனைய ரசிக நண்பர்கள் மிக கடுமையாக அவனிடம் கோபித்துக் கொண்டனர் , " ஒரு கொத்தா புடுங்கி இருந்தா ...எங்களுக்கும் கிடைச்சி இருக்கும் இல்லே....நீ ஒரு சுய நலவாதிடா !."

Perfume என்கிற பிரெஞ்சு படத்தில் ,நாயகன் உலகின் தலைச்சிறந்த..... அற்புத வாசனை திரவியத்தை தயாரித்து வைத்திருப்பான் ... அவனை தூக்கில் போட ஊரே திரண்டிருக்கும் ... அவன் சில துளிகள் மட்டும் அந்த திரவியத்தை கைக்குட்டையில் தெளித்து , பின் காற்றில் வீசுவான் . அவ்வளவு தான் ... அந்த சுகந்தத்தில் கவரப்பட்டு அனைவரும் அவனுக்கு அடிபணிவர் . பின்னர் ஊரே ஓ ... ஸாரி உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும்.... அருகிலிருப்போரோடு ! இறுதி ...க்ளைமாக்ஸில் நாயகன் மனம் வெதும்பி , வாசனை திரவியத்தின் முழு புட்டியையும் தன் மேல் ஊற்றிக் கொள்வான் ... சில துளிகளுக்கே அப்போது அப்படி நடந்தது .... பல நூறு துளிகள் என்றால்....என்னாகும்?? அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் நஞ்சு ! அவன் அணிந்திருந்த துணியின் கிழிந்த சில துண்டுகள் மட்டுமே இறுதியில் பார்க்க முடியும் !! இது அந்த பட நாயகன் விரும்பி ஏற்கும் முடிவு...நம் நிஜ நாயகர்கள் ??? எல்லாவற்றையும் இணைத்துப் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கூற்று புரியும் !

காதலிக்கும் போது ....காதலியின் முடி கூட மிக்க அழகாகத் தோன்றும்... எனக்கும் தோன்றியது ! அவளிடம் கேட்டேன் ...அவளும் அனுப்பி வைத்தாள் .எப்படி தெரியுமா...அவள் உபயோகித்த சோப்பில் சுற்றி ...சுற்றி ..ஓட்ட வைத்து ...அதை கவர் இட்டு அனுப்பி இருந்தாள் ! ஸ்மார்ட் ! ஆனால், பின்னர் இன்னும் நெருக்கமாகி விடும் போது ...அடுத்த கட்ட நடவடிக்கையில் ... முடி பிடிப்பதில்லை ! இப்படித்தான் ஒரு முறை முகத்தோடு முகமாக நெருங்கி முத்தமிடும் தருணத்தில் ... ஒரு கொத்து சிகை என் முகத்தில் பட்டதும்...கடுப்பாகி...முகத்தை சுளித்து அசிங்கமாக ."..ச்சே ", என்று விட்டேன் ! எனக்கே என்னை பார்க்க ஆளவந்தான் - நந்து மாதிரி தோன்றியது ! அவள் முகம் சிவந்து " அவ்வளவு அருவருப்பாயிருக்கா ....அப்ப கண்டிப்பா நான் கொடுத்த சோப்பு - சிகை உன்னிடம் இருக்காது", என்று சரியாகச் சொல்லி விட்டாள் ! நான் பயந்து போய் ,''அய்யயோ ...அப்படி எல்லாம் இல்லை ..என்று சொல்லி சமாதானமாக்கி ....பிற்பாடு அதே போன்ற சோப்பை வாங்கி ...கரைத்து சிறிதாக்கி....அதே அளவு முடியையும் ஒட்டி ... காட்டி தப்பித்துக் கொண்டேன் ! முத்தம் கூட அலுத்து விடுமோ .... அப்புறம் அதுவும்.... எல்லாம் தாண்டி ...உண்மையான ' மெய்யறிவை ' நோக்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன் !

ஒரு முறை பாண்டிச்சேரி அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் நான் முன்பு குறிப்பிட்டிருந்த சுருள் முடி நண்பன் வேலையில் இருந்தான் .அவனை பல முறை தொடர்ப்பு கொள்ள முயன்றும் முடியவில்லை , பின் ஒரு வழியாக அவன் தங்கியிருந்த தவலகுப்பத்திற்க்கு சென்று காத்திருந்தேன் . அவன் வேலை முடிந்து வந்ததும் "ஏண்டா ..வேலை கிடைச்சதும் சுத்தமா மறந்துட்டியா ... என்ன நினைச்சிக்கிட்டிருக்கே ? ", என்று சத்தம் போட்டேன்.அவன் தணிந்த குரலில் "ஸாரி மச்சி .... Factory ல வேலை கடுமை...அதான் ..!"

நான் " என்ன பெரிய மயிரு Factory "! , என்றேன். உடனே அவன் முகம் மலர்ந்து " மச்சி ...அது உண்மையிலேயே மயிரு பாக்டரி தான்டா ! ", என்றான்.ஆம் அது 'பரோட் கெம்' என்கிற தொழிற்சாலை . தலை முடி தான் மூலப் பொருளே ! திருப்பதி மற்றும் முக்கிய தளங்களிருந்து லாரி லாரியாக வருமாம்.அவற்றை அடர் அமிலங்களில் ஊற வைத்து ...பின் .. பல்வேறு Process க்கு பிறகு அதிலிருந்து Protein பிரித்து எடுப்பார்களாம் . மயிர் என்று சாதரணமாக திட்டி விடுகிறோம் , ஆனால் அதில் நம் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கிய சத்தான புரதம் இருக்கிறது !

எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு சிப்பந்தியின் தந்தை சில சமயம் கடைக்கு வருவார், சிப்பந்திக்கே வயது 40+ இருக்கும் , ஆனால் அவர் தந்தையோ மிக இளமையாக ... ஒரு முடி கூட நரைக்காமல் இருப்பார் ! கிராமத்தில் வசிக்கும் அவருக்கு 'டை' அடிக்கும் வாய்ப்பும் கிடையாது , அது மட்டுமின்றி அதற்கெல்லாம் செலவு செய்யும் மனிதர்களும் அவர்கள் கிடையாது ... பின்னே எப்படி என்று பல்வேறு களப் பணி விசாரணைகளுக்குப் பின்னர் கண்டுபிடித்து விட்டேன் ! அவருக்கு தினமும் மதியம் மீன்குழம்பை மட்டுமே பல்லாண்டுகளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாராம் !.. , நமக்கு சாம்பார் போல் அவருக்கு எப்போதும் மீன் குழம்பு தானாம் ! வீட்டில் மற்றவர் என்ன சாப்பிட்டாலும் இவருக்கு மட்டும் ஒரே ஒரு மீனை போட்டாலாவது குழம்பு வைக்க வேண்டுமாம், இல்லாவிடில் ரகளை தானாம் ! கடைக்கு மீன் வராத தினங்களில் இவரே , ஆறு குளம் சென்று பொடி மீன்களையாவது பிடித்து வருவாராம்.மழை , புயல் போன்ற இயற்கை சீற்ற நேரங்களில் மட்டும் மீன் குழம்பு கிடையாதாம் .... ஆனால் இது போன்ற சமயங்களுக்கு உபயோகிக்க ... என்று பானையில் போட்டு வைத்திருக்கும் கருவாடை வைத்து கருவாட்டுக் குழம்பு செய்யப்படுமாம் !

இந்த மீன் மேட்டர் தெரிந்த பிறகு , கடற்கரை கிராமம் ஒன்றில் வசிக்கும் என் நண்பன் ஒருவனின் நினைவும் .... ஒரு சம்பவமும் ஞாபகத்திற்கு வந்தது ! விருந்தோம்பலில் கலக்குவார்கள் அவனும் அவன் குடும்பத்தினரும் ! நாம் போன உடனே Starters ஆக ஒரு தட்டு நிறைய எறால் வறுவல் வைப்பார்கள் ! அப்புறம் மீன் , நண்டு போன்ற குழம்பு... வறுவல்கள் வேறு தனியாக..! நாம் தாளித்து... கருவேப்பிலையை வாசனைக்கு போடுவது போல் அங்கு எல்லாவற்றிலுமே எறால் சேர்ப்பார்கள்....முட்டைகோஸ் பொரியல் , ரசம் , வெண்டைக்காய் கூட்டு என்று அனைத்திலுமே கடலுணவு சேர்த்து தான் ! அந்த பகுதி மக்களுக்கு சற்று செம்பட்டையாகத்தான் தான் முடி இருக்குமேயொழிய ... அதுவும் ஒரு அழகாகத் தான் இருக்கும். மிக அரிதாகவே முடி நரைத்த பெருசுகளை பார்க்க முடியும் !

ஒருமுறை என் பெண் தோழிகள் அவரவர் காதலரோடு அந்த கடற்கரை கிராமத்திற்கு வந்திருந்தனர்...வந்தவர்கள் நண்பனின் விருந்தோம்பலில் நெகிழ்ந்து அவனை பாராட்டித் தள்ளினர்.அதிலும் அந்த 2 பெண் தோழிகளும் நண்பனின் சிகையை கைகளால் கோதியவாறே "ஹௌ சாப்ட் & ப்ரௌனி ", என்று கொஞ்சியதை பார்த்து அவர்களின் காதலர்களே நெளிந்தனர் ! நண்பனும் உச்சா குளிர்ந்து மேலும் சேவையை தொடர்ந்தான் . ரொம்ப குஷியாகி ஒரு மிகப் பெரிய ஏற்பாடொன்று செய்தான் . படகு மூலம் , ஒரு மனித சஞ்சாரமற்ற தீவிற்கு எங்கள் அனைவரையும் அழைத்து சென்றான். அற்புதமான இடம் , அழகிய கடற்கரை .... கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் இல்லை .... Discovery இல் வரும் Private பீச் போல ! ஜோடிகளை தனியே அனுப்பி விட்டோமென்றாலும் .... பாலைவனம் போல வெகு தூரம் வரை மணலாகவே இருந்ததால் ஜோடிகளால் ஒதுங்கவும் முடியவில்லை ! பின் கொண்டு வந்த உணவுகளை பிரித்து சாப்பிட்டு முடித்ததும் தான் ஒரு பிரச்சனை ஆரம்பமாயிற்று.

வந்திருந்த பெண்கள் இருவருக்கும் ச்சூ ..ச்சூ .. அவசரம்..... உடனே போக வேண்டும் என்றார்கள்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மறைப்பு கூட இல்லை, கிராமத்திற்கு திரும்பி செல்லவும் ஒரு மணி நேரம் ஆகும்.சரி , கடலில் இடுப்பளவு ஆழத்தில் நின்றுக் கொண்டு சுதந்திரமாக விடுங்கள் என்றேன் (What an idea sirji !) .ஒருதோழி மட்டும் கருத்தை கச்சிதமாக கவ்விக் கொண்டு முடித்து விட்டார்,இன்னொருவரோ கெண்டைக்கால் ஆழத்திற்கே பதறி ஓடி வந்து விட்டார்.கூட துணைக்கு அவள் காதலரையும் போக சொன்னாலும் உடன்படவில்லை.என்ன செய்யலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்த போது , தூரத்தில் முள் குத்துச் செடிகள் அரை ஆள் உயரத்தில் சிறிய புதராக காட்சியளித்தது , எதேஷ்டம்.... என்று அதை நோக்கி போக ஆரம்பித்தோம்.அந்த புதருக்கும் பின்னால் போய் குந்திக் கொண்டால் ....செவ்வனே மறைத்து வேலை முடிக்கலாம் என்று புரிந்தது ! புதருக்கு பின்னால் சென்றதும் தோழி ' "எல்லோரும் திரும்புங்கடா " என்றாள்.இன்னொரு தோழியும் பாதுகாப்பு அரணாக அவளருகில் நின்றுக் கொண்டாள்.ஏனைய நாங்கள் கடலை பார்த்து திரும்பிக் கொண்டோம் .... காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது !

"ஐயோ ", என்றொரு கூக்குரல் வந்ததும் சட்டென்று திரும்பினேன்.திரும்பிய என் பார்வை கோணத்தில் நேராக 'அதுவா ' தெரிய வேண்டும்?! புதருக்குள் புதர்... தேனடை .. நல்லரவின் படம் கொண்ட ......என்றெல்லாம் மனதில் வேகமாக வரிகள் ஓடியது ... இப்படியே ஓரிரு வினாடிகள் ஓடி சற்று தாமதமாகவே கண்களை விலக்கினேன் . மற்றவர்களை விட நான் சற்று வேகமாக திரும்பியதன் விளைவு...அந்தக் காட்சி.. ! மற்றவர் பார்ப்பதற்குள் ஜீன்ஸை பூட்டி விட்டாள் ! காற்று வீசியதில், முள் செடி ஆடி...அவள் தொடையில் குத்தி விட்டதாக சொன்னாள் ! நான் மட்டும் பார்த்ததை அவள் கவனித்து விட்டாள் என்று எண்ணி மனம் சங்கடப்பட்டது...எங்கே என்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று படபடப்புடன் நடந்து வந்தேன்.அவளின் காதலனுடன் இருக்கும் போது கூட மிக சகஜமுடனேயே என்னிடம் பேசுவாள் இருந்தாலும் ... இந்த விஷயத்தில் என்னாகுமோ என்று யோசனையுடன் விலகி நடந்தேன்.அனால் அவளோ எல்லோரையும் விட்டு என்னருகே வந்தாள் , "ஏய் ,ஸ்ரீ ".., என்றாள் ...அவள் முகம் பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது ,குனிந்தவாறு "..ம் ", என்றேன். தோழி சற்று நெருங்கி வந்து ,என் காதில் , "என்னடா .... செம சீனா ? ", என்றாள் !

பி.கு: 1 வாரமா காய்ச்சல் மற்றும் நீர் கோர்த்தலால் அவதிப்பட்டு ...சரியாகி வரும் வேளையில் அதைப் பற்றி பதிப்போம் என்று உட்கார்ந்தால்....பாருங்கள் பதிவு எங்கெங்கேயோ சென்று விடுகிறது.ஆனால் ஒன்று ....எங்கெங்கோ திரிந்தாலும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து விடுகிறது ! அம்மட்டில் சந்தோஷமே !!
ஊரில் என் பாட்டியிடம் யாரவது வந்து அவர்கள் பிரச்சனையை சொல்லி புலம்பிக் கொண்டிருப்பர்...பாட்டி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே "ஒக்... ..ழி , உன் கதை என்னடா ஒரே மயிரு புராணமா இருக்கு", என்பார் !

சிகைப் பதிப்பு படலம் 'முடி' ந்தது !



No comments:

Post a Comment